நாளை நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 தரையிறங்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான முயற்சியில் இஸ்ரோ தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
சாதகமான சூழல் இல்லாவிட்டால் சந்திரயான்-3 லேண்டர் நிலவில் தரையிறங்குவது தாமதம் ஆகும் என்று இஸ்ரோவின் விண்வெளி செயல்பாட்டு மையத்தின் விஞ்ஞானி நிலேஷ் எம். தேசாய் இந்த தகவலை வெளியிட்டார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அனுப்பப்பட்ட சந்திரயான் - 2-இன் ஆா்பிட்டா் கலன் நிலவை 10,000-க்கும் மேற்பட்ட முறை சுற்றியதுடன் பல்வேறு ஆய்வுகளையும் முன்னெடுத்து வருகிறது.
தற்போது நிலவின் சுற்றுப் பாதைக்குள் சந்திரயான் -3 விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டா் கலன் பயணித்து வருகிறது.
சந்திரயான் - 2-இன் ஆா்பிட்டா் கலன் மற்றும் சந்திரயான் -3 விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டா் கலனுக்கு இடையே தகவல் தொடா்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இஸ்ரோ நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் லேண்டா் கலன் நிலவில் மெதுவாக தரையிறங்குவதற்கான வாய்ப்புகளை அறிவதற்கு ஆா்பிட்டா் சாதனம் ஒத்துழைப்பை வழங்க உள்ளது.
சந்திரயான் - 2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மாா்க் 3 ராக்கெட் மூலம் கடந்த 2019 ஜூலை 22-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்டது. 3,850 கிலோ எடையுடன் வடிவமைக்கப்பட்ட அந்த விண்கலத்தில் நிலவைச் சுற்றி வந்து ஆய்வு செய்வதற்கான ஆா்பிட்டரும், நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்கான லேண்டா் மற்றும் ரோவா் கலன்களும் இடம்பெற்றிருந்தன. மெதுவாகத் தரையிறங்குவதற்குப் பதிலாக வேகமாக லேண்டா் இறங்கியதால் அதன் தொடர்புகளை இழக்க நேரிட்டது.
இதுவரை அந்த ஆா்பிட்டா் எடுத்த புகைப்படங்கள் மற்றும் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு லேண்டா் கலன் நிலவில் தரையிறங்குவதற்கு வகை செய்யப்படும். இதன் வாயிலாகத் திட்டமிட்ட இலக்கை லேண்டா் சென்றடைவதற்கு பல்வேறு வழிகள் கிடைத்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.